குத்து! வெட்டு!! கொல்லு!!!
குடங்குடமாய்க் குருதியுறிஞ்சிக்குடி!
கடத்திச் சென்றென்னைக் காணாமலாக்கு.
கல்லோடு கட்டிக்கடலிலும் இடு.
அப்பரல்லவே நானொன்றும்,
தெய்வம் துதித்துத் தெப்பமாய் மிதக்க?
கத்தி கொண்டு கழுத்தறு;
துப்பாக்கி கொண்டென் மீது தோட்டாக்கள் துப்பு.
பிரயோசனமற்றென்னுயிர் பிரியட்டும்!
ஆண்டுகள் பலவாய் அன்னமிட்டு வளர்ப்பாளன்னை - ஓர்
அரிசியேனும் அவித்துத் தராதென்
ஆன்மா பறிக்கும் அருகதை உனக்கேது?
நித்தம் நான் திரட்டிச் சேர்த்த நாட்கள்,
நிமிடத்தில் நீ மிரட்டிக் கொல்வதில் முடியட்டும்!
என்னில் கவலை கொள்ள நீ யார்?
எனைக் கவர்ந்து கொள்ள மட்டுமோர் நாள் பார்!
வாலிபம் கடந்து வயோதிபமும் தொட வேண்டியதோர் வாழ்வு - உன்
வக்கிரத்தால் வறிதாகி
கங்குகளுள் கருகிப்போகட்டும்!
ஆறறிவெல்லாமோர் புறமிருக்க,
ஓரறிவேனுமில்லா அற்பனே!
விதிவிலக்கு சில தவிர்த்து - வேறெந்த
விலங்கினமும், தன்னினம் தானே கொன்று மகிழ்வதில்லை.
மிருகமென்றுமுரைக்க முடியா குரூரப்பிண்டமே!
பிறவுயிர் பறிக்கவென்றேதான் பிறந்தாயோ?
இனந்தெரியாதவென்றுமுனை விளிப்பதோ?
இனந்தெரிந்தவனே நீ!
'இனம்' தெரிந்துதானே கொல்கிறாய்?
கறுப்பு மையிட்ட வெண்தாள்கள் பல
என் படம் கொண்டு பசையிட்டு ஒட்டப்பட;
வான் பார்த்தோரொலிபெருக்கி
வாசித்தென் பெயர் கூற;
எரிந்து வெடிக்கும் பட்டாசு
எமலோகத்துக்கென் வருகை சொல்ல;
அன்னை தந்தை அரற்றியழ;
சொந்தமெலாம் சோகம் கொள்ள;
நண்பர் நால்வரென் உடல் தாங்கிச்சுமக்க,
நீயோ...
'கொலைக்கூலி' கொண்டு
குடித்துக் கூத்திட்டுக் கும்மாளமுமடி!
நில்!
என்னுயிர் கொன்ற பின்
என் பிணத்தை மட்டுமேன் விட்டுச் சென்றாய்?
வா!
கொன்றவனே, கொண்டும் செல் என்னை.
கண்டதுண்டமிட்டு என்னுடலை
கறியாக்கி உணவாய்க் கொள்!
உன் வெறிக்கு, உருசியாய்த்தான் நானிருப்பேன்!!
கேள்!
மீண்டுமென் ஆன்மா கருக்கொள்ளும்.
அப்போதுமென்னை அழிப்பாயெனில்,
சொல்!
ஆர்ட்டிக்கில் நீ பிறந்தால்,
அந்தாட்டிக்காவில் நான் பிறக்க,
ஆண்டவன் அருளட்டும்.
அங்கும் தேடி வந்தென்னை அழிப்பாயெனில்,
உறுதியாய்ச் சொல்!
அரைப்பிடி மண்ணாகவேனும் அவதரித்து,
அரைவாழ்வில் அழிக்கப்படாமல்,
அப்போதேனும் 'முழுவாழ்வு' கொள்ள வேண்டும்!
2 comments:
ஆண்டுகள் பலவாய் அன்னமிட்டு வளர்ப்பாளன்னை - ஓர்
அரிசியேனும் அவித்துத் தராதென்
ஆன்மா பறிக்கும் அருகதை உனக்கேது...
Mihavum rasiththen.. :)
நன்றி Gajani!
Post a Comment