Tuesday, April 17, 2012

அவசர காலச்சட்ட நீக்கமும்; அசைலம் (Asylum) அடிப்பதற்கான ஏக்கமும் !




இருப்பு உறுதியெண்டு இறுமாப்புக் கொள்ள,
இறுக்கச் சட்டங்கள் இளகிப்போக வேண்டும்.
அப்பளமோ அவையெல்லாம் அரை மணியில் இளகிப்போக?

சட்டமாற்றங்கள் சட்டமெனவே மாறி
கோடு கிழித்துக் கோடி றூல்ஸ் போடும்!

பேர்ஸ் கொஞ்சம் பெரிசெண்டாலும் - இங்கத்தயப்
பெட்டையொண்டு தேடிப்பிடிச்சு PR எடுக்கலாம்.
பேர்சே இல்லையெண்டானபின் பெரிசுக்கெங்கே போறதெண்டு
கொஞ்சமாய் யோசித்து கொதியும் பிடிக்கும் மண்டை
குறுக்கு வழியோடியாங்கே 'அசைலம்' பற்றி அசைபோடும்

தடுக்கி விழுந்த காயம் காட்டி தற்கொலைப்படை பாய்ஞ்சதெண்டும்;
கல்லுப்பட்ட காயமெல்லாம் செல்லுப்பட்டே வந்ததெண்டும்;
கால் வைக்குமிடமெல்லாம் கண்ணிவெடி;
கடவுளே எண்டு தப்பினாலும் ஆமிட அடி!
எண்டெல்லாம் அளந்து விட்ட காலம் போய்,

தற்கொலைப்படை பாய்ஞ்சா தலை வரைக்கும் தெறிக்குமெண்டும்;
செல்லுப் பீசுப்பட்டால் பல்லுப் பீசும் மிஞ்சாதெண்டும்,
அடிபாட்டுப் போட்டோக்கள் பார்த்து ஆங்கிலேயன் அலேர்ட் என்றானபின்
அவன் காதில் சுற்றுமொரு பூதான் அகிலத்திலுண்டோ மக்காள்?

தந்திரத் தமிழன்தன் எந்திரப்புத்தி
முட்டையிலும் முளைத்ததென்றோர் முடி பிடுங்கிக் காட்டும்!
ஆழ்கடலில் அலைவோனுக்கு அமிர்தம் போலொரு துரும்பாய்,
'அவசரகாலம்'

அங்கே நான் போனால்,
அவசரகாலத்தில் சிக்கி என் காலம் அகாலமாகுமென்று
ஆயிரமாயிரம் படங்களோட்டி,
'இங்கேயே இரு' என்றோர் இனிப்பான வார்த்தையுடனே
இருப்பிடப் பதிவும் பெற்று - இப்படி
ஆண்டுகள் கொஞ்சமாய் 'அசைலம்' அடிச்சுத்தந்த
அவசர காலமும் அல்லையிலே போச்சென்றான பிறகு,
இருக்கிற மூளையை வறுத்தெடுத்தெண்டாலும் வழியொண்டு தேடோணும்!

ஆ...ஆ.....
அன்னை மண்ணுக்குக் கோல் அடிச்சு
அரேஞ்ச்மண்ட் கொஞ்சம் செய்யலாம்!

எங்காச்சும் கொடி பிடிச்சுக் கோஷம் போட்ட போட்டோக்கள்;
சுருண்டு கிடக்கும் பேப்பர்களிலிருக்கும் இருண்ட யுகத்து நியூசுகள்;
காக்கிச் சட்டைக்காரன் கையில் காசு கொஞ்சம் ஊட்டியேனும்,
கைதாகிக் கம்பியெண்ணிக் களியும் திண்டேனென்றொரு கடுதாசி.
இவைகளும் இன்ன பலவும் தேடி - மேலும்
அச்சுறுத்தலும்
ஆட்கடத்தலும்;
உயிர்ப்பயமும்
ஊமைக்குத்துக்களும்;
கிறீஸ் பூதங்களும்
கீறல் காயங்களுமெண்டு
உப கதைகளும் கொஞ்சம் கொண்டு,
கல்வி விசா காலாவதியாகுமுன் கவர்மெண்டைக் கம்ப்ரமைஸ் ஆக்கோணும்!

பாசுப்போட்டுடனும், பவுண் போன்ற பேப்பர்களுடனும்
இளிச்சுக் கொண்டு கிடக்கும் இமிக்கிரேசன் வாசற்படி மிதிக்குமொரு நாள் வரும்.
ஈற்றில்,
வெள்ளைக்காரனவன் விளக்கி விசாரித்தாங்கே அடிப்பது,
"அசைலமாயிருக்கும்!"
அன்றேல்,
அடியேனுக்கு அஃது ஆழப்பாயுமோர் "ஆப்பாகத்தானிருக்கும்!!"

1 comment:

Kajani said...

மிகவும் அருமை... தொடர்ந்தும் உங்கள் பதிவுகளை எதிர்பார்க்கின்றோம்